2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வீசிய ‘Ditwa’ புயலினால் பாதிக்கப்பட்ட மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் 865.79 மில்லியன் ரூபா மதிப்பிலான பாரிய நிவாரண வேலைத்திட்டத்தின் கீழ், சிலாபம் மாவட்ட மீனவர்களுக்கு நிவாரணங்களை வழங்கும் விசேட நிகழ்வு இன்று (2026 மார்ச் 23) சிலாபம் மீன்பிடித் துறைமுகத்தில் நடைபெற்றது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், புயலினால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட படகுகளுக்குப் பதிலாக சீநோர் (Cey-Nor) நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட 11 புதிய படகுகள் அடையாள ரீதியாக வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன், திருத்தப்பணிகள் நிறைவு செய்யப்பட்ட 14 படகுகள் மற்றும் புதிய வலைகளும் அமைச்சரினால் மீனவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இங்கு உரையாற்றிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள், ‘Ditwa’ சூறாவளியினால் ஏற்பட்ட பாரிய அழிவிலிருந்து நாடு மீண்டு வரும் வேளையில், தற்போதைய உலகளாவிய நெருக்கடியானது ஒரு உலகப் போருக்கு நிகரான தாக்கத்தை நாட்டுக்கு ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
"இத்தனை சவால்களுக்கு மத்தியிலும் நாம் மக்களை ஒருபோதும் தனித்து விடமாட்டோம். அரசியல் இலாபங்களுக்காகச் சிலர் அரசாங்கத்தை விமர்சித்தாலும், நாம் ஊழல் நிறைந்த பழைய அரசியல் கலாசாரத்தை முழுமையாக மாற்றியமைத்துள்ளோம். அமைச்சர்கள் என்ற ரீதியில் அனுபவித்த வாகன வசதிகள், மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் சம்பளங்களை நாம் முழுமையாகக் குறைத்துக்கொண்டு, முன்மாதிரியான அரசியல் கலாசாரத்தை ஆரம்பித்துள்ளோம். அவ்வாறு சேமிக்கப்படும் நிதியை மக்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காகவே நாம் பயன்படுத்துகிறோம். ‘Ditwa’ புயல் மற்றும் உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்களின் நலனை உறுதிப்படுத்துவதே எமது இலக்காகும்" என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் அவர்கள், பாதிக்கப்பட்ட இறால் வளர்ப்பாளர்களுக்கு 3 சதவீத மிகக்குறைந்த வட்டி விகிதத்தில் 25 மில்லியன் ரூபா வரை கடன் வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அரசாங்கத் திறைசேரியினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 865 மில்லியன் ரூபா நிதியின் ஊடாக, சீநோர் மற்றும் நோர்த் சீ போன்ற அரச நிறுவனங்களின் ஊடாக இந்த படகுகள் மற்றும் உபகரணங்கள் மீனவர்களுக்கு வழங்கப்படுவதாகக் கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் சுசாந்த கஹவத்த இதன்போது சுட்டிக்காட்டினார்.












