சட்டவிரோத, அறிவிக்கப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத (IUU) மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கைக்குச் சொந்தமான பலநாள் மீன்பிடி படகு ஒன்று மடகாஸ்கரின் கடல் எல்லைக்குள் வைத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் படகிலிருந்த எட்டு மீனவர்களும் தற்போது மடகாஸ்கரில் சிறை வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை விடுவிக்க அரசாங்கம் முயற்சித்துவருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே இன்று (23) தெரிவித்தார். கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இன்று பிரதி அமைச்சரை சந்தித்து, அவர்களை விடுவித்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
சம்பவம் பற்றிய விபரங்கள்
IMUL-A-0899-CHW (Ruth Baba -06) என்ற இந்த பலநாள் மீன்பிடி படகு கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி வெல்லமன்கரை மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்றுள்ளது. ஜூன் 2 ஆம் திகதி மடகாஸ்கர் நாட்டின் விசேட பொருளாதார வலயத்திற்குள் (EEZ) சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, ANTSANTSA மீன்பிடி ரோந்து படகு மூலம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மடகாஸ்கரின் விசேட பொருளாதார வலயத்திற்குள் நுழைவதற்குத் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க அவர்கள் தவறிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மடகாஸ்கர் அதிகாரிகளால் படகு சோதனையிடப்பட்டபோது, அதன் கப்பல் வழிசெலுத்தல் தரவுகள் மற்றும் AIS (தானியங்கி அடையாளப்படுத்தல் அமைப்பு) பதிவுகள் அழிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனால், மீன்பிடி கண்காணிப்பு மையத்தால் (F.M.C.) படகின் பயணப் பாதையை கண்காணிக்க முடியவில்லை. படகில் அனுமதிப்பத்திரம் அல்லது செல்லுபடியான மீன்பிடி உரிமம் இருக்கவில்லையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படகினுள், 16,125 கிலோகிராம் சுறாக்களும், 1,618 கிலோகிராம் உலர்த்தப்பட்ட சுறா, 23 கிலோகிராம் உலர்ந்த சுறா fins மற்றும் 4 கிலோகிராம் உலர்ந்த சுறா gills உட்பட கணிசமான அளவு சுறாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. படகிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட சுறா இனங்கள் CITES உடன்படிக்கையின் II ஆம் பின்னிணைப்பின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளதாக மடகாஸ்கர் சுற்றுச்சூழல் புலனாய்வு பாதுகாப்பு அதிகாரிகள் (OPJ) தீர்மானித்துள்ளனர்.
அரசின் தலையீடு மற்றும் நடவடிக்கைகள்
இந்த கைது தொடர்பாக கடற்றொழில் அமைச்சுக்கு முதலில் 2025 ஜூன் 11 ஆம் திகதி ஒரு WhatsApp செய்தி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தி அதே தினத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு அனுப்பப்பட்டதாகவும் எவ்வாறாயினும், படகு உரிமையாளர் இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சுக்கோ அல்லது கடற்றொழில் திணைக்களத்திற்கோ எந்த உத்தியோகபூர்வ அறிவிப்பையும் வழங்கவில்லையெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கும் படகு உரிமையாளர் இது குறித்து அறிவிக்க வேண்டாம் என அழுத்தம் கொடுத்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.
மடகாஸ்கர் நீதிமன்றத்தில் வழக்கு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. அங்கு பிரெஞ்சு மொழியில் வழக்கு விசாரணைகள் நடத்தப்படுகின்றன. "இந்த நிலையில், எங்கள் மீனவர்கள் சிங்கள மொழி பேசுவதால், சிங்கள மற்றும் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் இல்லாததால் நேற்று (ஜூலை 22) நடைபெற்ற வழக்கு ஆகஸ்ட் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்தார்.
பிரதி அமைச்சர் ரத்ன கமகே இது குறித்து சீஷெல்ஸில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் முதல் செயலாளருடன் கலந்துரையாடியதுடன், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிடம் பொருத்தமான மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். மொழிபெயர்ப்பாளர் கிடைத்தவுடன், வழக்கை துரிதப்படுத்தி, மீனவர்களை விடுவித்து மீண்டும் இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார். கடற்றொழில் அமைச்சும் கடற்றொழில் திணைக்களமும் இது குறித்து கவனம் செலுத்தியுள்ளதுடன், மீனவர்களின் குடும்பங்களுக்கும் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்த கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பீ.கே. கோலித்த கமல் ஜினதாச மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த உள்ளிட்ட அதிகாரிகளும் அவர்களிடமிருந்து தகவல்களைப் பெற்றுக் கொண்டனர்.
மீனவ சமூகத்தினருக்கான அறிவுறுத்தல்
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் ஏனைய நாடுகளின் கடல் எல்லைகளை மீறுவதால், இவ்வாறான துரதிர்ஷ்டவசமான நிலைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுவதாக கடற்றொழில் அமைச்சு வலியுறுத்துகிறது. இவ்வாறான சம்பவங்கள், சர்வதேச மட்டத்தில் இலங்கையின் நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, கைதுசெய்யப்பட்ட மீனவர்களை மீட்பதற்குப் பெருமளவிலான முயற்சியும் நிதியும் செலவிடப்படுகின்றது. மேலும், VMS போன்ற கருவிகளைச் செயலிழக்கச் செய்வது, நிலமைகளை மேலும் கடினமாக்குகிறது.
எனவே, அனைத்து மீனவ சமூகத்தினரும், குறிப்பாகப் படகு உரிமையாளர்களும், ஏனைய நாடுகளின் விசேட பொருளாதார வலயங்களுக்குள் பிரவேசித்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்து, சர்வதேசக் கடற்பரப்பில் மாத்திரம் சட்டரீதியாக மீன்பிடித்துப் பாதுகாப்பாக நாடு திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சட்டரீதியாகச் செயற்படுவதன் மூலம் இவ்வாறான சிரமங்களைத் தவிர்த்துக்கொள்ள முடியும் என்றும் பிரதி அமைச்சர் ரத்ன கமகே மேலும் வலியுறுத்தினார்.