கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்சார் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, அண்மையில் (மார்ச் 24) சீனாவின் குவாங்சூவில் (Guangzhou) அமைந்துள்ள தென் சீன கடல் கடல்சார் ஆய்வு நிறுவனத்தில் (SCSIO) நடைபெற்ற "வெப்பமண்டல கடல்சார் சுற்றுச்சூழல் மாற்றங்கள் குறித்த சீன-இலங்கை கல்வி மன்றத்தில்" (China-Sri Lanka Academic Forum on Tropical Marine Environmental Changes) இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டார்.
இந்த மாநாட்டில் உரையாற்றிய பிரதி அமைச்சர் ரத்ன கமகே, இந்தியப் பெருங்கடலின் ஒரு முக்கிய மையப்புள்ளியாக இலங்கையின் வரலாறு, கலாசாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவை எப்போதும் கடலுடன் நெருக்கமாகப் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளதை வலியுறுத்தினார்.
கடற்றொழில் தொழிற்துறை, கடல்சார் ஆய்வு மற்றும் கடல்சார் வள முகாமைத்துவம் ஆகிய துறைகளில் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையே நிலவும் நீண்டகால ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது காலத்தின் தேவையாகும் என பிரதி அமைச்சார் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய உலகம் எதிர்நோக்கும் காலநிலை மாற்றம், கடல் மாசடைதல் மற்றும் கடல்சார் வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துதல் போன்ற சவால்களை முறியடிக்க விஞ்ஞான ஆராய்ச்சிகளும் புத்தாக்கங்களும் இன்றியமையாதவை என குறிப்பிட்ட பிரதியமைச்சர், தென் சீன கடல்சார் அய்வு நிறுவனம் போன்ற முன்னனி நிறுவனங்களுடன் ஆராய்ச்சித் தரவுகளைப் பரிமாறிக்கொள்ளவும், தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் கூட்டு ஆராய்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கவும் இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது எனவும் தெரிவித்தார்.
இந்த கல்வி மன்றத்தில், சீன அறிவியல் நிறுவனத்தின் (CAS) பேராசிரியர் சாவ்லுன் லி (Prof. Chaolun Li) உள்ளிட்ட சீனப் பிரதிநிதிகளும், இலங்கையின் சார்பில் ருகுணு பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் பி.ஏ. ஜயந்த, விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஹேமாலி முனசிங்க, நாரா (NARA) நிறுவனத்தின் தலைவர் சனத் ஹெட்டியாராச்சி, கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டர்னி பிரதீப் குமார உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தநிலையில், இரு நாடுகளின் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையே ஏற்படுத்தப்படும் இந்த ஒத்துழைப்பு, எதிர்கால சந்ததியினருக்காக கடல் வளங்களைப் பாதுகாப்பதற்கும் அவற்றை மிகவும் பயனுள்ள முறையில் பயன்படுத்துவதற்கும் உதவும் என பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.











