சுற்றறிக்கைகளுக்குள் முடங்கிவிடாமல், ஊழியர் நலன்புரிக்கு முன்னுரிமை அளிக்கவும் - தலைவர்களுக்கு பிரதி அமைச்சர் அறிவுறுத்தல்
அண்மையில் வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து நேரில் ஆராய்வதற்காக, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் கௌரவ ரத்ன கமகே அவர்கள் நேற்று (02) இலங்கை கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் தலைமை அலுவலகங்களுக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது, அதன் ஊழியர்களில் சுமார் 50 பேர் வெள்ளத்தினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது. அவர்களின் வீடுகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், இழப்புகளை ஈடுசெய்வதற்கும் தேவையான நிதி மற்றும் பொருள் உதவிகளை உடனடியாக வழங்குமாறு பிரதி அமைச்சர் அதன் தலைவருக்குப் பணிப்புரை விடுத்தார்.
"இந்தத் தருணத்தில் எமது ஊழியர் குழாமின் நலன்புரிக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். உத்தியோகபூர்வ சுற்றறிக்கைகளுக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்படாமல், அவர்களின் மன உறுதியை மேம்படுத்தவும், அவர்கள் மீண்டும் எழுச்சி பெறவும் தேவையான உடனடி மற்றும் அர்த்தமுள்ள ஒத்துழைப்பை வழங்க வேண்டும்," என பிரதி அமைச்சர் வலியுறுத்தினார். இதற்காக நிறுவன நிதியங்கள் அல்லது ஊழியர் கடன் திட்டங்களைப் பயன்படுத்துமாறும் அவர் அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, பிரதி அமைச்சர் வெள்ளத்தினால் சேதமடைந்த வெல்லமங்கரை மற்றும் சிலாபம் கடற்றொழில் துறைமுகங்களுக்கும் விஜயம் செய்தார். அங்கு சேதமடைந்த வேலிகள், கூரைகள், வெள்ளத்தில் மூழ்கிய அலுவலகங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் சேதமடைந்த படகுகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து விரைவான மதிப்பீட்டை மேற்கொள்ளுமாறு அவர் உத்தரவிட்டார்.
அத்துடன், முழுமையான செயல்பாட்டுத்திறனை மீண்டும் நிலைநாட்டுவதற்காக, பிரதேச தொழில்நுட்ப அதிகாரிகளுடன் இணைந்து புனரமைப்புப் பணிகளை விரைவுபடுத்துமாறு துறைமுக மேலாளர்களுக்குப் பணிப்புரை வழங்கினார்.
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தில், கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அமைந்துள்ள சில விற்பனை நிலையங்களுக்கும், தலைமை அலுவலகத்திலுள்ள மீன் கையிருப்புகளுக்கும் ஏற்பட்டுள்ள சேதங்களை பிரதி அமைச்சர் அவதானித்தார்.
வரவிருக்கும் பண்டிகைக் காலத்திற்கு முன்னதாக, இந்த விற்பனை நிலையங்களைப் புனரமைத்து, விநியோகச் சங்கிலியை வழமைக்குக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அவர் அதன் தலைவருக்கு அறிவுறுத்தினார்.
"மீனவர்களுக்கு அவர்கள் பிடிக்கும் மீன்களுக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொடுப்பதும், நுகர்வோருக்கு - குறிப்பாக பண்டிகைக் காலத்தில் - சலுகை விலையில் மீன்களைப் பெற்றுக்கொள்ளவதற்கு வாய்ப்பளிப்பதும் எமது இரட்டை நோக்கமாகும்," என கௌரவ கமகே அவர்கள் தெரிவித்தார்.
இந்த பின்னடைவை முறியடிப்பதற்கு கட்சி பேதமின்றி அனைத்து அதிகாரிகளும் பங்குதாரர்களும் ஒன்றிணைந்து செயற்படுமாறு பிரதி அமைச்சர் கேட்டுக்கொண்டார்.







