
அண்மைய வெள்ளத்தினால் இலங்கையின் முன்னணி மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் சிலவற்றிற்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து நேரில் ஆராய்வதற்காக, மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே டிசம்பர் 01 ஆம் திகதி சீதுவை பகுதியில் கள விஜயமொன்றை மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது, நியூ மது நதி (New Madu Nadee International) மற்றும் புளூ லைன் ஓஷன் (Blue Line Ocean Pvt Ltd) உள்ளிட்ட முன்னணி ஏற்றுமதி நிலையங்கள் சுமார் ஐந்து அடி உயரத்தில் நீரில் மூழ்கியிருந்ததை பிரதி அமைச்சர் அவதானித்தார். இத்தொழிற்சாலைகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பெறுமதி சேர்க்கப்பட்ட மீன் தயாரிப்புகளை வழங்கும், நாட்டிற்கு பெருமளவு வெளிநாட்டு செலாவணியை ஈட்டித்தரும் பிரதான நிலையங்களாகும்.
குறிப்பாக, குளிரூட்டும் அறைகள் (Cool Rooms) உள்ளிட்ட அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலதிக நட்டத்தைத் தவிர்ப்பதற்காக மின்சார விநியோகத்தை உடனடியாக வழமைக்குக் கொண்டுவர வேண்டியதன் அவசரத் தேவையையும் இங்கு வர்த்தக உரிமையாளர்கள் சுட்டிக்காட்டினர்.
இதற்கு உடனடி பதிலளித்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே, அவ்விடத்திலிருந்தே கம்பஹா மாவட்டச் செயலாளர் மற்றும் இலங்கை மின்சார தனியார் நிறுவனத்தின் (LECO) சிரேஷ்ட அதிகாரிகளை தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்டார். இந்த ஏற்றுமதித் தொழில்களின் தேசிய முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், இத்தொழிற்சாலைகளுக்கான மின்சாரம் மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவைகளை வழமைக்குக் கொண்டுவருவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு வலியறுத்தினார்.
"மீன் உற்பத்திகள் ஏற்றுமதித் துறையானது நமது நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தின் வலுவான தூணாகும். இதன் மூலம் நாட்டிற்கு அவசியமான அந்நிய செலாவணி ஈட்டப்படுவதுடன், எமது நெடுநாள் மீன்பிடி படகுகள் உட்பட ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படுகிறது," என பிரதி அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
"பாதிக்கப்பட்ட இந்த 15 ஏற்றுமதித் தொழிற்சாலைகளும் கூடிய விரைவில் மீண்டும் இயங்குவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க அரசாங்கம் முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பிரதான சந்தைகளை நாம் இழந்தால், அது ஒட்டுமொத்த மீன்பிடித்துறையின் நிலையான தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்த மறுசீரமைப்புப் பணிகளை நாம் விரைவுபடுத்துவோம்."
அத்துடன், அனைவருக்கும் நன்மைகள் சமமாகப் பகிரப்படும் பலமான உற்பத்திப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் கொள்கை என்பதை மீண்டும் உறுதிப்படுத்திய அவர், பாதிக்கப்பட்ட தொழில்முனைவோர் மீண்டும் கட்டியெழுப்பப்படுவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி, அவர்கள் தேசிய பொருளாதாரத்திற்கு வழங்கும் பங்களிப்பைத் தொடர்வதற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்தார்.







