மாத்தளை மாவட்ட நன்னீர் மற்றும் அலங்கார மீன் வளர்ப்பாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்ட 20ஆவது மாவட்ட மீன்பிடி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் 04.11.2025 அன்று மாத்தளை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க, மாத்தளை மற்றும் தம்புள்ளை மேயர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸ், வனஜீவராசிகள் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களங்களின் சிரேஷ்ட அதிகாரிகள், அத்துடன் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை (NAQDA) மற்றும் கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் பிரதேச கடற்றொழில் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
தேவஹுவ, மொரகஹகந்த, நாலந்தா போன்ற பிரதான நீர்த்தேக்கங்களில் மீனவர்கள் எதிர்நோக்கும் நீண்டகாலப் பிரச்சினைகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
தேவஹுவ நீர்த்தேக்கத்தில் சட்டவிரோத காணி அபகரிப்பு, ஆக்கிரமிப்பு நீர்த் தாவரங்களின் பரவல் மற்றும் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கான அணுகுமுறையை கட்டுப்படுத்தும் பாரிய பாதுகாப்பு வலயத்தை குறைப்பதன் அவசியம் போன்ற விடயங்கள் இங்கு கண்டறியப்பட்டன.
கூட்டத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர் ரத்ன கமகே, இந்தப் பிரச்சினைகளை வெற்றிகரமாகத் தீர்ப்பதற்கு நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
அத்துடன், உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட போதிலும், மகாவலி அதிகாரசபை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் போன்ற முக்கிய நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொள்ளாமை குறித்து அவர் தமது கவலையை வெளியிட்டார்.
"இந்த ஒருங்கிணைப்புக் கூட்டங்களின் பிரதான நோக்கம், சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களையும் ஒரே மேடைக்கு அழைத்து வந்து, மீன்பிடி சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளைக் கண்டறிவதாகும். இந்தத் துறையின் முன்னேற்றமானது அனைத்து தரப்பினரினதும் கூட்டு முயற்சி மற்றும் ஒருங்கிணைப்பிலேயே தங்கியுள்ளதுடன், பிரதான அதிகாரிகள் கலந்துகொள்ளாமை பயனுள்ள மற்றும் சரியான நேரத்தில் தீர்மானங்களை எடுப்பதற்கு தடையாக அமையும்" என பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கூட்டத்தின் முக்கிய முடிவுகள் மற்றும் பரிந்துரைகள்:
• நிலையான முகாமைத்துவம் : தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் (NAQDA) தயாரிக்கப்பட்ட முகாமைத்துவத் திட்டங்கள், தேவஹுவ மற்றும் மொரகஹகந்த போன்ற நீர்த்தேக்கங்களில் மீன் உற்பத்தியை அதிகரிக்க வழிவகுத்துள்ளதால், அந்த வேலைத்திட்டங்களை மேலும் வலுப்படுத்துதல்.
• கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு : நாலந்தா நீர்த்தேக்கத்தின் மதகுகளை புனரமைத்தல் மற்றும் மீன்பிடித் துறைமுகங்களுக்கான அணுகுமுறை வீதிகளை மேம்படுத்துவதை துரிதப்படுத்துதல்.
• அலங்கார மீன் தொழிலுக்கு ஆதரவு : மீன் தீவன விலையைக் குறைப்பதற்கு பிராந்திய ஒத்துழைப்பைப் பெறுதல், கடன் வசதிகளை வழங்குதல் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கான புதிய பயிற்சித் திட்டங்களை ஆரம்பித்தல்.
அனைத்து மாகாண மற்றும் தேசிய நிறுவனங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதன் மூலம், நிலையான மற்றும் இலாபகரமான மீன்பிடித் தொழிலை உருவாக்க அமைச்சு அர்ப்பணிப்புடன் இருப்பதாக பிரதி அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார்.





