கடற்றொழில் சமூகத்திற்கு வழங்கப்படும் சேவைகளில் நிலவும் தாமதங்கள் மற்றும் நிர்வாக சிக்கல்களைத் தீர்த்து, அனைத்து மீன்பிடி துறைமுகங்களையும் திறமையான மற்றும் கவர்ச்சிகரமான மையங்களாக மாற்றும் நோக்கில், இலங்கை மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் விசேட முற்போக்கு ஆய்வுக் கூட்டம் மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோரின் தலைமையில் நேற்று (13) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பி.ஏ.பி.கபில பமுனு ஆராச்சி உட்பட நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மீன்பிடி துறைமுகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி முகாமையாளர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது உரையாற்றிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பின்வருமாறு வலியுறுத்தினார் :
"அரசாங்கம் பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில், மக்களுக்குச் சேவையாற்றுவதில் ஏற்படும் தேவையற்ற தாமதங்களை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறான தாமதங்களைத் தவிர்த்து, மீனவ மக்களுக்கு திறமையான, முறையான மற்றும் சீரான சேவையை வழங்க வேண்டியதன் அவசியத்தை நான் வலியுறுத்துகிறேன்," என அமைச்சர் தெரிவித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே, மீனவ சமூகத்தினர் உடனடியாக உணரக்கூடிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டினார்.
"நீண்ட கால திட்டங்களை விட, மீனவர்களுக்கு இன்று தேவையானது குறுகிய கால தீர்வுகளே ஆகும். எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக, அதாவது ஆறு மாதங்களுக்குள், அனைத்து மீன்பிடி துறைமுகங்களையும் சுத்தமான, அழகான மற்றும் கண்கவர் இடங்களாக மாற்றுவதே எமது இலக்காகும்.
கிரிந்த போன்ற துறைமுகங்களில் காணப்படும் மணல் படிவுப் பிரச்சினைக்கும், அனைத்து துறைமுகங்களின் கழிவு மேலாண்மைக்கும் உடனடி தீர்வுகள் வழங்கப்பட வேண்டும். காலி துறைமுகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பாவனையற்ற படகுகளை அகற்றும் திட்டத்தை அனைத்து துறைமுகங்களிலும் நடைமுறைப்படுத்தி, ‘எனது துறைமுகம், அழகான துறைமுகம்’ என்ற கருப்பொருளை யதார்த்தமாக்குவோம்," என அவர் தெரிவித்தார்.
நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை பலப்படுத்தி, கொள்முதல் செயல்முறையிலுள்ள சிக்கல்களைத் தீர்த்து, இந்த குறுகியகால இலக்குகளை அடைவதற்கு அனைத்து அதிகாரிகளினதும் முழுமையான அர்ப்பணிப்பு அவசியம் என்பதும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.








