நாட்டின் பிரதான மீன் விநியோக மையமான பேலியகொட மத்திய மீன் சந்தை வளாகத்தில் மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் எதிர்நோக்கும் நீண்டகாலப் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்கள் இன்று (12) குறித்த வளாகத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டதுடன், வர்த்தக சமூகத்தினருடன் விசேட கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தினார்.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்திற்காக கடற்றொழில் துறையிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த சந்திப்பு நடைபெற்றது. இதில் பிரதி அமைச்சர் மொத்த மற்றும் சில்லறை வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேரடியாகக் கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின் போது வர்த்தக சமூகத்தினர் பல்வேறு முக்கிய பிரச்சினைகளை பிரதி அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்:
• முறைசாரா மொத்த வியாபாரம் : சந்தை வளாகத்திற்கு வரும் மீன் லொரிகள், பதிவு செய்யப்பட்ட மொத்த விற்பனை நிலையங்களைத் தவிர்த்து, வளாகத்திற்குள்ளேயே வெளியாருக்கு நேரடியாக விற்பனை செய்வதால், பதிவு செய்யப்பட்ட வர்த்தகர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவதாகவும், சந்தையின் முறையான ஒழுங்குமுறை சீர்குலைவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
• வர்த்தகர்களைப் பதிவு செய்ய வேண்டியதன் அவசியம் : சந்தை வளாகத்தில் பணிபுரியும் வர்த்தகர்கள், ஊழியர்கள் மற்றும் சட்டபூர்வமான சேவை வழங்குநர்களுக்கு முறையான அடையாள அட்டைகள் வழங்கப்படாமை, அங்கீகரிக்கப்படாத நபர்களின் வருகை, திருட்டு மற்றும் ஏனைய முறைகேடுகள் அதிகரிக்கக் காரணமாக அமைந்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
• பாதுகாப்பு மற்றும் சட்டப் பிரச்சினைகள் : சந்தை வளாகத்தினுள் நிதி மோசடிகள் (வெற்று காசோலைகளை வழங்குதல் போன்றவை) மற்றும் வர்த்தகத் தகராறுகளைத் தீர்ப்பதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இந்த அனைத்துப் பிரச்சினைகளையும் கவனமாகக் கேட்டறிந்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே, அவற்றைத் தீர்ப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக சமூகத்தினருக்கு உறுதியளித்தார்.
"பேலியகொட மீன் சந்தை வளாகமானது நாட்டின் பொருளாதாரத்திற்கும் மக்களின் ஊட்டச்சத்து மட்டத்திற்கும் நேரடிப் பங்களிப்பை வழங்கும் மிக முக்கியமான இடமாகும். இங்குள்ள பிரச்சினைகளைத் தீர்த்து, சுகாதாரமான, முறையான மற்றும் அமைதியான வணிகச் சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். நீங்கள் சுட்டிக்காட்டிய அங்கீகரிக்கப்படாத வர்த்தகத்தைத் தடுக்கவும், அனைத்து வர்த்தகர்களுக்கும் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தை விரைவுபடுத்தவும், பொலிஸாருடன் கலந்துரையாடி முறையான பாதுகாப்புத் திட்டத்தை வகுக்குவதற்கும் நான் முன்னிபேன்" என பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
தமது முன்மொழிவுகளை எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறும், 2026 ஆம் ஆண்டு முதல் இந்த சந்தை வளாகத்தை புதிய பொலிவுடன் முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான குறுகிய காலத் திட்டத்தை உடனடியாகத் தயாரிப்பதாகவும், அதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பை வழங்குமாறும் பிரதி அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.









