26 August 2026
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மீன் வளர்ப்பாளர்களுக்கு நிதியுதவி
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ், தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை (NAQDA) ஏற்பாடு செய்த டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன் வளர்ப்பை மேற்கொள்ளும் மீனவர்களுக்கான நிதியுதவிக் காசோலைகள் வழங்கும் நிகழ்வு நேற்று 24.08.2026 மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜே. எஸ். அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்துகொண்டு பயனாளிகளுக்கான காசோலைகளை வழங்கி வைத்தார்.
இதன்போது, டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 31 பயனாளிகளுக்கு சுமார் 14.25 மில்லியன் ரூபா பெறுமதியான நிதியுதவிக் காசோலைகளும், குளங்களில் மீன் குஞ்சு உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் 5 சங்கங்களுக்கு 1.75 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சின் மாவட்ட இணைப்பாளர் எஸ். எம். ஏ. நசார், மாவட்ட நீர்வாழ் உயிரின வளர்ப்பு விரிவாக்கல் உத்தியோகத்தர் ஜே. நெல்சன் உள்ளிட்ட நீர்வாழ் உயிரின வளர்ப்பு விரிவாக்கல் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.











