18 June 2026
ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் இரணைப்பாலையில் நன்னீர் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு

சட்டவிரோத செயற்பாடுகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் துணைநிற்காது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் இரணைப்பாலை கிராமிய கடற்றொழில் அமைப்பிற்காக நிறுவப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட நன்னீர் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக மீனவர் சமூகத்திடம் கையளிக்கப்பட்டது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சின் அதிகாரிகள், உள்ளூராட்சி பிரதிநிதிகள், கடற்றொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பெருமளவிலான மீனவர்கள் கலந்து கொண்டனர்.

இப்பனிக்கட்டி உற்பத்தி நிலையம் மூலம் மீனவர்கள் தங்களது மீன்பிடி உற்பத்திகளை தரமான முறையில் பாதுகாத்து சந்தைப்படுத்துவதற்கான வசதிகள் மேம்படுத்தப்படுவதுடன், அவர்களின் பொருளாதார நடவடிக்கைகளும் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநிறுத்துவதில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

“கடந்த காலங்களில் சில அரசியல்வாதிகள் சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டு செயல்பட்ட சூழ்நிலைகள் இருந்தன. ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எந்தவொரு சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் ஆதரவோ, ஒத்துழைப்போ வழங்காது. சட்டத்தின் ஆட்சி அனைவருக்கும் சமமாக அமைய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்” என அவர் தெரிவித்தார்.

மேலும், சமூகத்தில் பரவலாக காணப்பட்ட போதைப்பொருள் கலாச்சாரத்தை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், அதில் கணிசமான முன்னேற்றங்கள் எட்டப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் நன்கு அறிந்திருப்பதாக தெரிவித்த அவர், அவற்றை கட்டம் கட்டமாக தீர்த்து வைப்பதற்கான திட்டமிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

“மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதும், அவர்களின் தொழிலை நவீனமயப்படுத்துவதும் எமது அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைகள் அனைத்தையும் ஒரே நாளில் தீர்க்க முடியாது. எனினும், அரசாங்கம் என்ற பொறுப்புடன் அவற்றை ஒவ்வொன்றாக அடையாளம் கண்டு கட்டம் கட்டமாக தீர்த்து வைக்க உறுதியாக செயற்பட்டு வருகின்றோம்” என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

இந்நன்னீர் பனிக்கட்டி உற்பத்தி நிலையம், இரணைப்பாலை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள மீனவர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கு பெரும் ஆதரவாக அமையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், கடற்றொழில் துறையின் உற்பத்தித் திறன் மற்றும் வருமான உயர்விற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என தெரிவிக்கப்பட்டது.

Share

Latest News

காணாமல் போன ‘IDAY-A- 0122KMN’ மீன்பிடிப் படகைத் தேடுவதற்கு தெற்கு கடற்பரப்பிலுள்ள வர்த்தகக் கப்பல்களின் உதவியும் நாடப்படுகிறது : கடற்படை, விமானப்படை மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் கூட்டு நடவடிக்கைகள் தொடர்கின்றன
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு படகுகள் மற்றும் வலைகள் வழங்கி வைப்பு!
ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் இரணைப்பாலையில் நன்னீர் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு
நார்வேயின் மிகப்பெரிய கடல் உணவு நிறுவனம் இலங்கையின் மீன் பதப்படுத்தும் துறையுடன் இணைந்து செயற்பட ஆர்வம்
கொழும்பு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகள் : கரையோரப் பகுதிகளில் கைவிடப்பட்ட அரச கட்டடங்களை மீனவ சமூகத்தின் நன்மைகளுக்காக பயன்படுத்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆலோசனை
இலங்கையின் கடற்றொழில் துறையின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால ஒத்துழைப்பு குறித்து கனேடிய உயர்ஸ்தானிகருக்கும் கடற்றொழில் அமைச்சருக்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு
1 2 3 15

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன