3 July 2026
இலங்கை மற்றும் ஸ்பெயினுக்கு இடையில் கடற்றொழில் ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கான விசேட இணக்கப்பாடு
ஸ்பெயின் தூதரகத்தின் விவசாயம், கடற்றொழில் மற்றும் உணவு தொடர்பான ஆலோசகர் ஹுவான் மானுவல் வெலாஸ்கோ லியோன் (Juan Manuel Velasco León) மற்றும் இலங்கை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச ஆகியோருக்கு இடையிலான விசேட உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இன்று (03) அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சூரை (Tuna) மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள முன்னணி நாடுகளில் ஒன்றாக ஸ்பெயின் விளங்குவதால், இலங்கையுடன் கடற்றொழில் ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்ள ஸ்பெயின் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக, இந்தியப் பெருங்கடலில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோதமான, அறிக்கையிடப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத (IUU) மீன்பிடி நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு இரு நாடுகளும் இணைந்து செயற்படும் விதம் குறித்தும், அது தொடர்பாக இலங்கை அரசாங்கம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், தேசிய எல்லைகளுக்கு அப்பாலுள்ள கடல்சார் பல்லுயிர் தொடர்பான உடன்படிக்கையை (BBNJ Agreement) நடைமுறைப்படுத்தும்போது இலங்கைக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்கவும், கடற்றொழில் துறையில் மனிதவள மேம்பாட்டுப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் ஸ்பெயின் பிரதிநிதி இணக்கம் தெரிவித்தார்.
ஸ்பெயின் வசமுள்ள மேம்பட்ட நீர்வாழ் உயிரின வளர்ப்பு (Aquaculture) தொழில்நுட்பம், குறிப்பாக சிப்பிகள் (Mussels) மற்றும் முத்துச்சிப்பிகள் (Oyster) வளர்ப்பு முறைகள் குறித்தும், சூரை மீன்பிடியில் பயன்படுத்தப்படும் நவீன ‘சூரை மற்றும் பர்சேன்’ (Tuna and Purse Seine) தொழில்நுட்பம் தொடர்பான அறிவை இலங்கையுடன் பகிர்ந்து கொள்வது குறித்தும் இச்சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் கடற்றொழில் துறையில் வலுவான உறவை ஏற்படுத்தி, புதிய தொழில்நுட்பங்களை இலங்கைக்குப் பெற்றுக்கொள்வது குறித்துச் சாதகமான முடிவுகள் எட்டப்பட்டன. இக்கலந்துரையாடலில் கடற்றொழில் திணைக்களம் மற்றும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிலையத்தின் (NARA) உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
Share


