Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

Share
26 August 2026
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வியல் போதனைகள் ஒற்றுமையான சமூகத்திற்கான வழிகாட்டியாக அமையட்டும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்

நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் பிறப்பை நினைவுகூரும் புனித மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு, இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தனது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மனிதகுலத்திற்கு அன்பு, கருணை, சமத்துவம், சகோதரத்துவம், நீதி, பொறுமை மற்றும் அமைதி ஆகிய உயரிய விழுமியங்களைப் போதித்த நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் இந்த புனித நாளானது, அவரது வாழ்வியல் போதனைகளை மீண்டும் சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு முக்கியமான சந்தர்ப்பமாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாள் முழுவதும் மனிதர்களுக்கிடையிலான வேறுபாடுகளைக் கடந்து, ஒவ்வொருவரும் கண்ணியத்துடனும் சமத்துவத்துடனும் வாழ வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். ஏழைகள், ஆதரவற்றோர், அநாதைகள் மற்றும் சமூகத்தில் பின்தங்கியவர்களின் நலனில் அக்கறை செலுத்தியதுடன், பிறருக்கு உதவுதல் மற்றும் சமூகப் பொறுப்புடன் செயற்படுதல் போன்ற பண்புகளையும் வலியுறுத்தினார்.

“நிச்சயமாக அல்லாஹ் நீதியையும், நன்மையையும், உறவினர்களுக்கு உதவுவதையும் ஏவுகின்றான்; அநியாயத்தையும், தீமையையும், வரம்பு மீறுவதையும் தடுக்கின்றான்.”

— புனித அல்குர்ஆன் 16:90

எனும் இறைவசனம், மனித வாழ்வில் நீதி, நன்மை மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது. இந்த உயரிய விழுமியங்கள் தனிமனித வாழ்வை மட்டுமன்றி, ஒட்டுமொத்த சமூகத்தையும் நல்வழிப்படுத்தக்கூடியவை.

பல்வேறு இனங்கள், மதங்கள் மற்றும் மொழிகளைச் சேர்ந்த மக்கள் வாழும் எமது இலங்கையில், பரஸ்பர புரிந்துணர்வு, மத நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் என்பன எமது எதிர்காலத்திற்கான மிக முக்கியமான அடித்தளங்களாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வியல் போதனைகளில் காணப்படும் மனிதநேயம் மற்றும் சமூக நீதியின் செய்தி, இத்தகைய ஒற்றுமையான சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு வலிமையான வழிகாட்டியாக அமையும்.

இன்றைய சமூகத்தில் வெறுப்பு, பிரிவினை மற்றும் தவறான புரிதல்களுக்கு இடமளிக்காமல், அன்பையும் அமைதியையும் புரிந்துணர்வையும் முன்னிலைப்படுத்த வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் எதிர்கால தலைமுறையினர் நல்லொழுக்கம், சகிப்புத்தன்மை, சமூகப் பொறுப்பு மற்றும் மனிதநேயம் ஆகிய பண்புகளை தமது வாழ்வில் வளர்த்துக்கொள்வது நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் பங்களிப்பாக அமையும்.

மீலாதுன் நபி தினம் ஒரு மத நிகழ்வை நினைவுகூரும் நாளாக மட்டுமன்றி, அன்பு, கருணை, நீதி, சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய உயரிய பண்புகளை எமது அன்றாட வாழ்வில் நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிமொழி நாளாகவும் அமைய வேண்டும்.

இந்த புனித நாளில், இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம் மக்களின் இல்லங்களிலும் அமைதி, மகிழ்ச்சி, ஆரோக்கியம், செழிப்பு மற்றும் நல்லிணக்கம் நிறைந்திருக்கவும், அவர்களின் அனைத்து நற்பணிகளும் வெற்றியடையவும் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கும் எனது இனிய மற்றும் இதயம் கனிந்த மீலாதுன் நபி தின நல்வாழ்த்துகள்!

Latest News