11 August 2026
வத்தளை பள்ளியவத்தை மீனவ சமூகத்தின் தசாப்தகால கோரிக்கைக்குத் தீர்வு: பிரதி அமைச்சர் ரத்ன கமகே கள விஜயம் - சுற்றாடல் மற்றும் சமூக தாக்கங்கள் குறித்த முறையான ஆய்வுக்குப் பிறகு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கத் தீர்மானம்.
கம்பஹா மாவட்ட மீனவ ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எழுப்பப்பட்ட வத்தளை, பள்ளியவத்தை பிரதேச மீனவர்களின் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே இன்று (11) அப்பகுதிக்கு விசேட கள விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
பள்ளியவத்தை பிரதேச மீனவர்கள் தமது படகுகளை நங்கூரமிடுவதற்கு முறையான இறங்குதுறை இல்லாததன் காரணமாக பல தசாப்தங்களாக கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த மீனவர்கள் தமது படகுகளை ஹெமில்டன் கால்வாயை ஒட்டி நிறுத்தி வைப்பதுடன், கால்வாயின் குறைந்த ஆழம் மற்றும் பாலம் காரணமாக படகுகளை இயக்குவது மிகவும் கடினமாக உள்ளது. குறிப்பாக பருவகாலத்தில் முகத்துவாரம் வழியாக கடலுக்குச் செல்ல முடியாமையால், அப்பகுதியில் உள்ள சுமார் 750 மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக இங்கு தெரியவந்துள்ளது.
இந்தக் கள ஆய்வின் பின்னர் கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர், பள்ளியவத்தை பிரதேசமானது கொழும்பு வர்த்தக துறைமுகத்திற்கும் களனி கங்கையின் முகத்துவாரத்திற்கும் மிக அருகில் அமைந்துள்ளதால், இது சுற்றாடல் மற்றும் சமூக ரீதியாக மிகவும் தீர்மானமிக்க பகுதி என சுட்டிக்காட்டினார்.
“மீனவர்களின் கோரிக்கைக்கு இணங்க, இங்கு அலைதாங்கியுடன் கூடிய நங்கூரமிடும் தளத்தை அமைக்கும் போது, கடலரிப்பு மற்றும் கடல் அலைகளின் தன்மை குறித்து முறையான அறிவியல் மதிப்பீடு அவசியமாகும். எனவே, எவ்வித தாமதமும் இன்றி இது தொடர்பில் சாத்தியமான ஆய்வை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளேன். தற்போதுள்ள கொழும்பு நகர அபிவிருத்தித் திட்டம் மற்றும் துறைமுக அபிவிருத்தித் திட்டத்துடன் இணைத்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை நாம் ஆராய்ந்து வருகிறோம்,” என பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பள்ளியவத்தை பகுதியில் மாத்திரம் 110 இற்கும் மேற்பட்ட ஒருநாள் மீன்பிடிப் படகுகளும் (IDAY/IMUL) 300 இற்கும் மேற்பட்ட சிறிய படகுகளும் (OFRP/NTRB) உள்ளன. இந்த நங்கூரமிடும் தளத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் மீனவ சமூகத்திற்கும் அப்பகுதி இளைஞர்களுக்கும் பல புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதி அமைச்சர் இதன்போது லன்சியாவத்தை மீன்பிடி நங்கூரமிடும் தளத்தின் தற்போதைய நிலையையும் பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டெஃப்னி பெர்னாண்டோ, வத்தளை பிரதேச செயலாளர், கடற்றொழில் அமைச்சு மற்றும் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், கரையோர பாதுகாப்பு திணைக்களம் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரிகள், பிரதேச மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.










