03 August 2026
புத்தளம் முதல் பொத்துவில் வரை கடற்றொழில் தடை நீடிப்பு: கடலில் மிதக்கும் 15 கொள்கலன்கள் குறித்து மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை - கடற்றொழில் பணிப்பாளர் நாயகம்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பில் நிலவிய சீரற்ற காலநிலை ஓரளவுக்கு வழமைக்குத் திரும்பியுள்ள போதிலும், புத்தளம் முதல் பொத்துவில் வரையான கடற்பரப்பில் தொடர்ந்தும் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு நிலவுவதால், விதிக்கப்பட்டுள்ள கடற்றொழில் தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார்.

அதற்கமைய புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் வரையான கடலோரப் பகுதிகளில் சிறு மற்றும் ஒருநாள் மீன்பிடிப் படகுகள் தொழிலுக்குச் செல்வதற்கான தடை மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளுக்கு அமைய கடற்பரப்பு வழமைக்குத் திரும்பியவுடன் இந்தத் தடை நீக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

கடந்த சில தினங்களாக வானிலை எச்சரிக்கைகளை மீறி கடலுக்குச் சென்ற மன்னார், கற்பிட்டி, சிலாபம் மற்றும் நீர்கொழும்புப் பகுதிகளைச் சேர்ந்த 5 மீனவர்கள் உயிரிழந்தமை குறித்து பணிப்பாளர் நாயகம் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டார். மீனவர்களின் பாதுகாப்பிற்காக விடுக்கப்படும் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் குறித்துத் தீவிர அவதானம் செலுத்துமாறும், எங்கு தொழிலில் ஈடுபட்டாலும் கண்டிப்பாக உயிர் காப்பு அங்கிகளை (Life Jackets) அணியுமாறும் அவர் மீண்டும் மீனவர்களை வலியுறுத்தினார்.

கடலில் மிதக்கும் கொள்கலன்கள் (Containers) குறித்த எச்சரிக்கை:

இரண்டு நாட்களுக்கு முன்னர் கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே கடலில் விழுந்த 17 வெற்றுக் கொள்கலன்களில் இதுவரை 02 மாத்திரமே கண்டறியப்பட்டுள்ளன. எஞ்சிய 15 கொள்கலன்களும் தற்போதைய கடல் நீரோட்டத்தின் திசைக்கு அமைய கொஸ்கொட, காலி, ரத்கம மற்றும் மாத்தறை உள்ளிட்ட தெற்குக் கடற்பரப்பை நோக்கி அடித்துச் செல்லப்படக்கூடிய அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த மிதக்கும் கொள்கலன்களுடன் படகுகள் மோதுவதால் பாரிய விபத்துக்கள் ஏற்படக்கூடும் என்பதால், தெற்குக் கடற்பரப்பில் பயணிக்கும் பலநாள் கலன்கள் உள்ளிட்ட அனைத்து மீனவர்களும் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறான கொள்கலன்களைக் கண்டால் உடனடியாக கடற்றொழில் திணைக்களத்தின் வானொலி நிலையங்களுக்கு (Radio Stations) அறிவிக்குமாறு பணிப்பாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share

Latest News